articles

img

அரசு கஜானாவை தனியாருக்கு மடைமாற்றும் பட்ஜெட்

உணவு,  உரம் மற்றும் எரிபொருள்  ஆகியவற்றுக்கான மானியங்கள் 
கடுமையாக வெட்டப்பட்டிருக்கிற அதேசமயத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புக்காக ஊக்கத்தொகை அளிக்கிறோம் என்ற பெயரில் 
அரசின் கஜானாவிலிருந்து மானியம் அளிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

2024-25 ஒன்றிய பட்ஜெட்டானது, வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும்  மக்கள் நலம் குறித்து திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அதே சமயத்தில் உண்மையில் மக்கள் விரோத, முதலாளிகள் ஆதரவு கொள்கையையே தொடர்ந்திருக்கிறது என்று சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச்  செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசாங்கத்தின் 2024-25க்கான பட்ஜெட்,  தான் பின்பற்றிவந்த மக்கள் விரோத கார்ப்பரேட்டுகள் ஆதரவு கொள்கையின் தொடர்ச்சியேயாகும். ஆனால் அது வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் அளிக்கப்பட்டிருக்கின்றன.

பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது அது நிதியமைச்சரின் சொல்லுக்கும், உண்மையான செயல்களுக்கும் இடையே உள்ள வஞ்சக வேறுபாடுகளை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. அரசின் வருவாய் சுமார் 15 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளபோதிலும், செலவினம் வெறும் 5.9 விழுக்காடாகும். இது சென்ற ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டில் 1.8 விழுக்காடு வீழ்ச்சியையே காட்டுகிறது.

மோடி அரசாங்கத்தின் பத்தாண்டு கால ஆட்சியில், மக்களின் வாழ்நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் ஆழமாகியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சமூகத்தில் சமத்துவமின்மை மிக மோசமான அளவிற்கு அதி கரித்திருக்கிறது. இவ்வாறு பொருளாதார நிலை மிக மோசமாகவுள்ள சூழ்நிலையில், இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட், பெரும் வர்த்தகக் கார்ப்பரேட் நிறுவனங்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலும், உழைக்கும் மக்களை மேலும் வறுமைக்குழிக்குள் தள்ளும் விதத்திலுமே  கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஊக்கமளிப்பு எனும் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்

 மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் எதையும் தீர்த்திடும் விதத்தில் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. மாறாக செய்யப்பட்டிருப்பதெல்லாம், உற்பத்தி, மூலதன செலவினம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கம் என்ற பெயர்களில் ஊக்கம் அளிக்கிறோம் என்ற  பெயரில்  அரசின் கஜானாவை தனியார் கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இதில் வேடிக்கை வினோதம் என்னவென்றால் இவ்வாறு மடை மாற்றம் செய்வதற்காக இதுவரை எவ்விதமான அமலாக்க முறையும் ஏற்படுத்தப்படவில்லை என்பதேயாகும்.

பட்ஜெட்டில், மகளிர் மற்றும் குழந்தை வளர்ப்புத்துறைக்கான ஒதுக்கீட்டில்  2.5 விழுக்காடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இன்றுள்ள பணவீக்க நிலையில் இதனை ஓர் உயர்வு என்றே கூறமுடியாது.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான ஒதுக்கீடும், 2024 பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கப்பட வில்லை என்பதையே காட்டுகிறது. விவசாயத்துறை ஆழமான நெருக்கடியில் சிக்கித் தவித்திடும் இன்றைய நிலையில் கிராமப்புற வேலையின்மை யும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக மாகியுள்ள நிலையில் இவ்வாறு இத்திட்டத்திற்கான செலவினமும் கூடுதலாக்கப்படவில்லை.

தொழிலாளர் நலநிதி  மானியங்கள் வெட்டு

உணவுப் பணவீக்கம் ஏற்கனவே 9.4 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில் உணவு மானியம் 3.33 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதே போன்று ரசாயன உரத்திற்கான மானியமும் 13.18 விழுக்காடு குறைக்கப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயுவிற்கான மானியம் கூட 2.57 விழுக்காடு வெட்டப்பட்டிருக்கிறது.

தொழிலாளர் நல நிதியத்திற்கான (Labour Welfare Fund) ஒதுக்கீடும் 1200 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இத்துடன் தொழிலாளர் துறைக்கான பட்ஜெட்டிலும் 3000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று கிராமப்புற வளர்ச்சி நிதியத்திற்கான (Rural Development Fund) ஒதுக்கீடும் 20 விழுக்காடு வெட்டப்பட்டிருக்கிறது, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டிலும் 1500 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது, சுத்த மான தண்ணீர் திட்டத்திற்கான (Clean Water Programme) ஒதுக்கீட்டிலும் 1,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டிலும் 43 விழுக்காடு குறைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கான மானியங்கள் கடுமையாக வெட்டப்பட்டிருக்கிற அதே சமயத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புக்காக ஊக்கத்தொகை அளிக்கி றோம் என்ற பெயரில் அரசின் கஜானாவி லிருந்து மானியம் அளிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டி ருக்கிறது. ஆயினும் இதனையெல்லாம் கண்காணிப்பதற்கான அமைப்புமுறை எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.  

கார்ப்பரேட்டுகளின் வரி குறைப்பு

இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் என்ற ஒன்று 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்தத்  திட்டத்திற்கான நிதியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும். அவர்கள் இத்தொகையைப் பெற்று, தங்கள் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காகவும், அவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும் அளித்திடுவார்களாம்.

பல வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்  செயல்பாட்டில் இருப்பதால், முதல் முறையாக, மொத்த நேரடி வரி வசூல்களில், கார்ப்பரேட் வரியின் பங்கு தனிநபர் வருமான வரி(29.2%)க்கும் கீழே (27.2%)ஆகக் குறைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தபின்பும், வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கான கார்ப்பரேட் வரி இப்போது இருந்துவரும் 40 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு செலுத்தாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றிடும் விதத்தில் மேலும் பல திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

தனியாரிடம் எரிசக்தி துறையை தாரை வார்க்கும் சூழ்ச்சி

மேலும் பட்ஜெட்டில் எரிசக்தி மாற்றத்தின் மூலம் ஆற்றல் பாதுகாப்பு என்று கூறப்பட்டிருப்ப தெல்லாம் அணுசக்தி உட்பட கேந்திரமான எரிசக்தித்துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சூழ்ச்சியேயாகும். மிகவும் முக்கிய மான 25 கனிமங்களுக்கான கலால் வரிகள் வெட்டப் பட்டிருக்கின்றன. மொபைல்கள் மற்றும் துணைக் கருவிகளுக்கான வரிகளும் குறைக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்துமே மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளேயாகும்.

இவ்வாறு இந்த பட்ஜெட் முற்றிலுமாக ஒரு மக்கள் விரோத பிற்போக்குத்தனமான பட்ஜெட்டாகும் என்று சிஐடியு இந்தப் பட்ஜெட்டைக் கண்டிக்கிறது. தொழிலாளர் வர்க்கம் இதற்கெதி ராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கோரியுள்ளார்.              (ந.நி.)